திடீரென வந்த "நாகம்மாள்" கணக்கு.. முற்றாக நிராகரித்த மைக்கேல் குன்ஹா...!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், நாகம்மாள் என்பவர் மூலம் காட்டிய கடன் கணக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் கணக்கு முற்றிலும் விதிமுறைகளுக்குப் புறம்பானது, எனவே இதை ஏற்க முடியாது என்று பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும் நாகம்மாள் கணக்கை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டதும் கூட சரியல்ல, தவறானது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்த நாகம்மாள் கணக்கு குறித்து நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பிலிருந்து....
நான்கரை கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை
ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டத்தில் வாங்கிய தங்க, வைர நகைகள், வங்கிகளில் வைத்திருந்த பிக்சட் டெபாசிட்டுகள், செலவழிக்காமல் வைத்திருந்த பணம் என நான்கரை கோடி ரூபாய் பணத்திற்கு எந்த வருமான வரித்துறையிடமும் கணக்கு காட்டவில்லை. இது எந்த கணக்கும் காட்டப்படாத ஊழல் பணம் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிறப்பு நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. வருமானவரித்துறையிடம் ஜெயலலிதாவும் சசிகலாவும் காண்பித்த கணக்கு எப்படி இருக்கிறது என நான் ஆராய்ந்ததில் ஒரு சில உண்மைகள் தெளிவாகத் தெரிகிறது.
சசிகலாவிடம் அதிகாரம்
ஜெயலலிதாவும், சசிகலாவும் பார்ட்னர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சசிகலாவுக்கு அதிகாரம் கொடுத்து ஒப்படைத்து விட்டேன் என ஜெயலலிதா தனது பதிலில் சொல்லியிருக்கிறார். சசி எண்டர்பிரைசஸ் மூலமாக ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரது கணக்கில் ஆறு லட்சத்து பதினைந்தாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய் ஊழல் பணம் புழங்கியது என லஞ்ச ஒழிப்பு போலீஸ் சொன்னது.
சரியாக கணக்கிடவில்லை
சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 91-96 காலகட்டத்தில் பனிரெண்டு லட்சத்து அறுபதாயிரத்து எண்ணூறு ரூபாய் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை சரியாக கணக்கிடவில்லை எனவும் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் ஊழல் தொகையை இரட்டிப்பாக்கினார். சசி எண்டர்பிரைசஸ் தொலைபேசி வசதிகள் செய்து தந்தது, ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் கொடுத்தது, ஃபேக்ஸ் அனுப்பியது, பில்டிங் பிளான்களை வரைந்து தந்தது போன்ற முக்கியமான வேலைகளை செய்ததன் மூலம் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வருமானம் வந்தது. அத்துடன் நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் இரண்டு கட்டிடங்களை சசி எண்டர்பிரைசஸ் வாடகைக்கு விட்டது.
மகரக் கொம்பு நாகம்மாள்
தஞ்சை மாவட்டம் மகர கொம்பு என்கிற இடத்தில் விவசாய நிலத்தை லீசுக்கு விட்டது. அத்துடன் நாகம்மாள் என்கிற பெண்மணிக்கு கொடுத்த கடனை அவர் திரும்ப செலுத்தினார். அதனால் சசி எண்டர்பிரைசசுக்கு பதினாறு லட்சத்து தொண்ணூறாயிரம் வருமானமாக கிடைத்தது என ஒரு வரவு-செலவு அறிக்கையை வருமான வரித் துறைக்கு ஜெயலலிதாவின் ஆடிட்டராக இருந்த சௌந்தரவேலன் கொடுத்திருக்கிறார். அது சரி என வருமானவரித்துறையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இது தவறு
இது வருமான வரித்துறையின் நடைமுறை சட்டங்களுக்கு எதிரானது. வருமான வரித்துறை சட்டம் 229 பிரிவின்படி இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஒருவர் பணம் செலுத்தும் போது அந்த பணத்தை வங்கிக் கணக்கு மூலம் வங்கிக் கணக்கு பதிவெண் கொண்ட காசோலை மூலமாக அல்லது டி.டி. மூலமாகத்தான் செலுத்தவேண்டும். அதேபோல் 20,000 ரூபாய்க்கு மேல் பணத்தை வாங்குபவர்களும் காசோலை மூல மாகவோ டி.டி.மூலமாகவோ பணவரவை வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி நடைபெறும் பணப் பரிவர்த்தனை களைத்தான் வருமானவரித்துறை ஏற்றுக் கொள்ளும் என இந்த சட்டப் பிரிவு தெளிவாக சொல்கிறது. இந்த நடைமுறையை வருமானவரித்துறை பின்பற்றுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஊழலைத் தடுக்க
ஊழல் போன்ற தவறான முறையில் சம்பாதிக்கப்படும் பணம் வருமானவரித்துறை கணக்கிற்குள் வந்துவிடக் கூடாது. சட்டப்படி தெரிந்த வகையில் வரும் வருமானம் என்கிற ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (ஊ) என்கிற குற்றப் பிரிவு வரையறைபடுத்தும் பணப் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் காசோலை அல்லது டி.டி. என்கிற நடைமுறை கடைப்பிடிக்கப் படுகிறது.
மிக மோசமான நடைமுறை
நாகம்மாள் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கடனை திருப்பி கொடுத்த விவகாரத்தில் மிக மோசமான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. நாகம்மாள் காசோலை மூலமாகவோ டி.டி. மூலமாகவோ இந்தத் தொகையைத் தரவில்லை. நாகம்மாளுக்கு எப்பொழுது சசி எண்டர் பிரைசஸ் கடன் வழங்கியது. ஏன் கடன் கொடுத்தது என்கிற விவரமே இல்லை. வருமானவரித்துறையிலோ, இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் முன்னிலையிலோ அவ்வளவு ஏன் இந்த வழக்கை கடந்த பதினெட்டு வருடமாக விசாரிக்கும் நீதிமன்றத்திலோ நாகம்மாள் ஆஜராகவில்லை. சசி எண்டர்பிரைசஸில் கடன் வாங்கினேன் என சொல்லவில்லை.
கணக்கிலேயே வராத நாகம்மாள்
இந்த வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு நாகம்மாள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த வழக்கின் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட பிறகு ஒரு வரவு- செலவு அறிக்கையை ஆடிட்டர் சௌந்தரவேலன் தயாரிக்கிறார். அதை வருமானவரித்துறை ஏற்றுக் கொள்கிறது. வருமான வரித்துறை ஏற்றுக் கொண்ட இந்த பணப் பரிவர்த்தனை, சட்டப்படி ஏற்கத் தக்கது அல்ல. நாகம்மாள் கடனை திருப்பி செலுத்தியதாக சொல்லப்படும் பதினாறு லட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (ஊ)-ன் படி ஊழல் பணம்தான் என நான் முடிவுக்கு வருகிறேன்.
மோசடியான கணக்கு
இப்படி ஜெயலலிதா ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நாகம்மாள் கடனாகக் கொடுத்தார் என்பது போன்ற பெயரில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றினர். ஜெயலலிதாவின் ஊழல் பணத்தில் பல்வேறு கம்பெனிகளின் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்தனர்.
நல்ல பணமாக்க நடந்த முயற்சி
இந்தச் செயலுக்கு சட்டப்படி உள்ள பெயர் பணப் பரிவர்த்தனை மோசடி. இந்த மோசடி மூலம் ஊழல் பணத்தை நல்ல பணமாக்க ஜெயலலிதாவுன் இணைந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் முயன்றார்கள் என்று நீதிபதி குன்ஹா கூறியுள்ளார்.