நில மோசடி புகார்: ஹரியாணா அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு.. சிக்கலில் ராபர்ட் வதேரா !
சண்டிகர்: வர்த்தக வளாகங்கள் கட்டுவதற்கு ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததில் நடந்த முறைகேடுகள் குறித்த தனது அறிக்கையை விசாரணை கமிஷன் தலைவர் திங்ரா ஹரியாணா அரசிடம் சமர்ப்பித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா. இவரது கணவர் ராபர்ட் வதேரா. ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஆட்சியின் போது, ராபர்ட் வதேரா நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களுக்கு குர்கான் செக்டார் 83 மற்றும் சில இடங்களில் நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராபர்ட் வதேரா கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையில் ஹரியாணா அரசு கமிஷன் அமைத்தது.
கடந்த ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட இந்த கமிஷன் வதேராவின் நிறுவனம் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் வர்த்தக வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில், தனது விசாரணை அறிக்கையை ஹரியாணா அரசிடம் நீதிபதி திங்ரா நேற்று சமர்ப்பித்தார்.
அதில், 6 வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக குர்கான் செக்டார் 83-ல் வர்த்தக வளாகங்கள் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திங்ரா, நில ஒதுக்கீட்டில் நடந்த பல்வேறு முறைகேடுகள், அதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளேன். அதுபற்றிய விவரங்களை இப்போது வெளியிட முடியாது. ஹரியாணா அரசு வெளியிடும் போது தெரிய வரும் என்றார். மேலும் இந்த முறைகேடு தொடர்பான 182 பக்க அறிக்கையில் அரசு அதிகாரிகள் மற்றும் தனி நபர்களை பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, ஹரியானாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோருக்கு இந்த மோசடியில் நேரடி தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் இருவருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.