உலககோப்பை கபடி: இறுதிப் போட்டியில் இந்திய அணி !
ஆமதாபாத்: உலககோப்பை கபடியின் அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை 73-20 என வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் 3வது உலககோப்பை ஆண்கள் கபடி போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 36-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. இறுதியில் 73-20 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி போட்டியில் ஈரான் மற்றும் தென் கொரியா அணிகள் மோதின.
முதல் பாதியில் தென் கொரியா அணி 13-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது. இருப்பினும் இரண்டாவது பாதியில் நேர்த்தியாக ஆடிய ஈரான் அணி 28-22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி தனதாக்கியது.
இதனையடுத்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஈரானை எதிர்கொள்கிறது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இந்த முறையும் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.