பிறந்த மண்ணான ராமேஸ்வரத்தில் 'மக்களின் ஜனாதிபதி' கலாமின் புகழுடல்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!!
ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் மண்டபத்தில் இருந்து அவரது பிறந்த மண்ணான ராமேஸ்வரத்துக்கு ராணுவ வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பேருந்து நிலையம் அருகே அப்துல் கலாம் புகழுடல் வைக்கப்பட்டு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேகலாயாவில் நேற்று முன்தினம் மறைந்த மக்களின் ஜனாதிபதி கலாம் உடல் நேற்று டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
Emotional welcome to mortal remains of #PeoplesPresident #APJAbdulKalam on arrival @ #Mandapam on way 2 #Rameswaram pic.twitter.com/Xh6vPCrbdD
— Sitanshu Kar (@SpokespersonMoD) July 29, 2015
இதனைத் தொடர்ந்து இன்று காலை டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்திலிருந்து ராணுவ வாகனம் மூலமாக டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு கலாம் உடல் கொண்டுவரப்பட்டது. அந்த விமானத்தில் கலாமின் உறவினர்கள், மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், மேகாலயா மாநில ஆளுநர் சண்முகநாதன் ஆகியோரும் வந்தனர்.
இந்த விமானம் பகல் 12.30 மணிக்கு கலாம் உடலுடன் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசையா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் கலாம் உடலைப் பெற்றுக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அவர்களுடன் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட 10 பேர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கலாம் உடல் மண்டபம் எடுத்துச் செல்லப்பட்டது.
6 ஹெலிகாப்டர்களும் பின் தொடர்ந்து சென்றன. இந்த ஹெலிகாப்டர்கள் பிற்பகல் 2.10 மணியளவில் மண்டபம் சென்றடைந்தன.
அங்கு கலாம் உடல் இறக்கப்பட்டு ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் ராணுவ வாகனத்தில் கலாமின் புகழுடல் ஏற்றப்பட்டு ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.
Posted by Ponraj Vellaichamy on Wednesday, July 29, 2015
இந்த வாகனம் சென்ற வழியில் பொதுமக்கள், மாணவர்கள் வரிசையாக நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாலை 3.10 மணியளவில் பிறந்த மண்ணான ராமேஸ்வரத்தை கலாமின் புகழுடல் சென்றடைந்தது.
அங்கு பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கலாம் புகழுடல் வைக்கப்பட்டது. மத்திய அமைச்சகள் பாரிக்கர், வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உறவினர்கள் இறுதி பிரார்த்தனையை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்காக நீண்ட வரிசைகளில் பல மணிநேரமாக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
இன்று இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் நாளை காலை 11 மணிக்கு கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.