ரெட் லைட் ஏரியாவில் கூட என் கற்பு பத்திரமாக இருந்தது... பேஸ்புக்கில் குமுறிய பெண் #kamathipura
மும்பை: மும்பையின் ரெட் லைட் பகுதியான காமத்திபுராவைச் சேர்ந்த ஒரு பெண் பேஸ்புக்கில் போட்டுள்ள பதிவு அதிர வைப்பதாக உள்ளது. காமத்திபுராவில் கூட எனது கற்பை என்னால் காக்க முடிந்தது. ஆனால் எனது பள்ளிக்கூட ஆசிரியர் அதைப் பறித்து விட்டார் என்று அப்பெண் போட்டுள்ள பதிவால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Humans of Bombay என்ற முகநூல் பக்கத்தில் இப்பெண் தனது சோக அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இவரது தாயார் கேரளாவைச் சேர்ந்தவர். இளம் வயதில் மும்பைக்குக் கடத்தி வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார். பின்னர் காதலித்து மணம் புரிந்து விபச்சாரத்திலிருந்து மீண்டார். தனது மகளை ஒழுக்கத்துடன் வளர்த்தார்.
அப்பெண்ணும் விபச்சார விடுதிகள் நிறைந்த மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திபுராவில் நல்லபடியாகவே வளர்ந்தார். ஆனால் சமூகம்தான் விடாதே.. பார்வைகளால் இப்பெண்ணை வெறித்து மேய்ந்தது. வெறுப்பை உமிழ்ந்தது.. சங்கடங்கள், சஞ்சலங்கள் நிறைந்ததாக மாறிப் போனது இப்பெண்ணின் வாழ்க்கை. தான் சந்தித்த பல்வேறு சவால்கள் குறித்து அவர் Humans of Bombay முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதிலிருந்து...
காமத்திபுராவில் பிறந்தேன்
நான் காமத்திபுராவில் பிறந்தேன். எனது தாயார் ஒரு செக்ஸ் ஒர்க்கர். ஆனால் அவராக விரும்பி வரவில்லை. கேரளாவிலிருந்து கடத்தி வரப்பட்டு ஈடுபடுத்தப்பட்டார். எனது தந்தையை சந்தித்தபோது காதல் கொண்டார். திருமணம் செய்து கொண்டனர். விபச்சாரத்தையும் விட்டு விட்டார். வீட்டு வேலை பார்க்க ஆரம்பித்தார். வாழ்க்கை முறை மாறியபோதும் கூட அவர்கள் காமத்திபுராவை விட்டு வெளியேறவில்லை. எனவே நானும் அங்கேயே பிறந்து வளர ஆரம்பித்தேன்.
வளர வளர
வளர வளர எனக்குப் பல பிரச்சினைகள் வந்தது. என்னை சமூகம் பாரபட்சமாக நடத்தியது. எல்லோரும் என்னை வெறுத்தனர். எனது கருப்பு நிறத்தைச் சுட்டிக் காட்டி கேலி செய்தனர். காக்காய் என்று கூறினார்கள். கருப்பு பசு என்றார்கள். என்னுடன் சிறார்கள் பேச மறுத்தார்கள். பள்ளிக்கூடத்திலும் என்னை தீண்டத்தகாதவளாக நடத்தினர்.
10 வயதில் கெடுத்த ஆசிரியர்
எனது 10 வயதில் எனது பள்ளிக்கூட ஆசிரியர் என்னை பலாத்காரம் செய்தார். எது பேட் டச், எது குட் டச் என்று கூட சொல்லித் தராத பள்ளிக்கூடங்களைத்தான் நாம் அதிகம் வைத்துள்ளோம். எனவே எனக்கும் அந்த ஆசிரியரின் செயல் அப்போது என்னவென்று புரியாமல் போய் விட்டது. எனக்கு நடந்ததை எனது 16 வயது வரை நான் யாரிடமும் சொல்லவில்லை. அதன் பிறகுதான் எனக்கு என்ன நடந்தது என்றே புரிய வந்தது.
கை கொடுத்த நாடகம்
என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது நாடகங்கள்தான். தெரு நாடகக் குழு ஒன்றில் நான் இணைந்தேன். அது செக்ஸ் குறித்த விழிப்புணர்வு நாடகங்களை நடத்திய குழு. எது பேட் டச் என்பது குறித்தும், செக்ஸ் என்றால் என்ன என்பது குறித்தும் நாங்கள் நாடகம் மூலம் விளக்கினோம். பலாத்காரமும் நடக்கும் ஒரு இடத்தில் கொண்டு அதுகுறித்து நாமே போய் விளக்குவது மிகுந்த வலியுடையது.
காமத்திபுராதான் எனது வீடு
எனது பெற்றோர் 2013ல் கேரளா போய் விட்டார்கள். ஆனால் நான் போகவில்லை. காமத்திபுராதான் எனது வீடு. இது அழகான வீடும் கூட. இங்கு நிறைய அன்பு இருக்கிறது. இங்குள்ள பெண்கள் நல்லவர்கள், அழகானவர்கள், நல்ல மனம் படைத்தவர்கள். என்னை தங்களது மகள் போல பார்த்துக் கொள்கிறார்கள். ஒருமுறை ஒரு என் மீது ஒரு கார் மோதுவது போல வேண்டும் என்றே போனது. இங்குள்ள சில பெண்கள் அந்தக் காரை நிறுத்தி அவரிடம் சண்டைக்குப் போய் விட்டார்கள். அவரை காரை விட்டு இறக்கி மன்னிப்பு கேட்க வைத்தார்கள். காமத்திபுரா பெண்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே அந்த ஆணின் போக்குக்குக் காரணம்.
என்னைக் காப்பவர்கள்
பலமுறை ஆண்கள் என்னிடம் ஆபாச சைகை செய்வார்கள். கூப்பிடுவார்கள். அப்போதெல்லாம் இங்குள்ள பெண்கள்தான் என்னைக் காப்பாற்ற வருவார்கள். இது நிச்சயம் வித்தியாசமானதுதான். ஆனால் காமத்திபுராவில் யாரும் என்னை பாரபட்சமாக நடத்தவில்லை. மாறாக பாசத்தோடு நடத்துகிறார்கள். இங்கு என்னை யாரும் பாலியல் ரீதியாக சீண்டியதில்லை. தவறாக பயன்படுத்தியதில்லை. இங்கு நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால் வெளியில்தான் எனக்குப் பாதுகாப்பு இல்லை. எனவேதான் இங்கிருந்து போக நான் அஞ்சுகிறேன்.
கேர்ள் ஆன் தி ரன்
கிரந்தி அமைப்பின் மூலமாக நான்பிரான்சிஸ்கோ சென்றேன். அங்கு நடந்த கேர்ள் ஆன் தி ரன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிறைய கற்றுக் கொண்டேன். எனது நிறத்தை அங்கு ஏற்றுக் கொண்ட மக்களை நான் பார்த்தேன். எனது பின்னணி, எனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர்கள் புரிந்து கொண்டார்கள். பரிவு காட்டினார்கள். ஊக்கம் கொடுத்தார்கள்.
அழகுதான் எல்லாமா
ஏன் எல்லோரும் அழகை மட்டுமே போஷிக்கிறார்கள். நீங்கள் அழகாக இருக்கலாம், கலராக இருக்கலாம். ஆனால் நான் கருப்புதான். நானும் அழகுதான். என்னை அழகாகவே உணர்கிறேன். தோலின் நிறம்தான் அழகு என்றால் நிச்சயம் அது தவறு. மக்களிடம் உள்ள நல்ல விஷயத்தை ஏன் பார்க்க மறுக்கிறார்கள். இதெல்லாம் மாற வேண்டும் என்று கூறியுள்ளார் அப்பெண்.