காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு
நகரி: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு( 81) விஜயவாடாவிலும் மடம் உள்ளது. அங்கு உள்ள சந்திரமவுலீஸ்வர வெங்கடேச சுவாமி கோவிலில் சதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் குணம் அடைந்தார்.
ஜெயேந்திரருக்கு நேற்று மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விஜயவாடாவில் உள்ள ஆந்திரா ஹார்ட் அன்ட் பிரையன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு நுரையீரலில் சளி தேங்கியதால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவருக்கு டாக்டர் ரவீந்திரநாத் தலைமையிலான டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள ஜெயேந்திரரின் பிரத்தியேக டாக்டர்கள் ஆலோசனையின்பேரில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விஜயவாடா டாக்டர்கள் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஜெயேந்திரர் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்லும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடதக்கது