கவண் படத்தில் காட்டியது போலவே.. தொழில் அதிபரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய டிவி சேனல் அதிகாரி கைது
பெங்களூர்: தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கன்னட செய்தி சேனலின் சிஇஓவை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னட செய்தி சேனலான ஜனஸ்ரீயின் சிஇஓ லட்சுமிபிரசாத் வாஜ்பாயி(42). அவர் தொழில் அதிபர் ஒருவர் குறித்து வில்லங்கமான செய்தியை ஒளிபரப்பியுள்ளார். மீதமுள்ள செய்தியை ஒளிபரப்பாமல் இருக்க ரூ. 10 கோடி கேட்டு லட்சுமிபிரசாத் அந்த தொழில் அதிபரை மிரட்டியுள்ளார்.
அந்த தொழில் அதிபர் இது குறித்து பெங்களூர் கோரமங்களா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் அறிவுரையின்பேரில் தொழில் அதிபர் பணத்தை லட்சுமிபிரசாத்திடம் கொடுக்க அங்கு வந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
போலீசார் லட்சுமிபிரசாத் மற்றும் அவரின் ஊழியர் மிதுன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மிரட்டி பணம் பறிப்பது லட்சுமி பிரசாத்துக்கு புதிது அல்ல.
மிரட்டி பணம் வாங்கியதாக லட்சுமிபிரசாத் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளன. யாராவது ஒரு தொழில் அதிபரை குறிவைத்து அவர் பற்றிய விபரங்களை சேகரித்து அவருக்கு எதிரானதை மட்டும் சேனலில் ஒளிபரப்பி மீதமுள்ளதை வெளியிடாமல் இருக்க மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
2011ம் ஆண்டு பெங்களூரில் துவங்கப்பட்ட ஜனஸ்ரீ சேனல் யஷ் பிராட்காஸ்டிங் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தினுடையது என்றாலும் அது பாஜக தலைவர் ஜனார்தன் ரெட்டி மற்றும் அவருக்கு நெருக்கமான ஸ்ரீராமுலுவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறப்படுகிறது.