இன்று அமாவாசை தினம்.. ஜெ., ஓபிஎஸ் போட்டோக்களுக்கு திதி கொடுத்து போராடிய கன்னட அமைப்பினர்
பெங்களூரு: மேகேதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டித்து ஜெயலலிதா, முதல்வர் பன்னீர்செல்வம் போட்டோக்களை வைத்து திதி கொடுத்தனர் கன்னட அமைப்பினர்.
பெங்களூரு டவுன்ஹால் பகுதியில், பல்வேறு கன்னட அமைப்புகள் ஒன்று கூடினர். சத்தியநாராயணா என்பவர் தலைமையில், ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களுக்கு திதி கொடுக்கப்பட்டது.
வாழைப்பழம், ஊதுபத்தி, தேங்காய் ஆகியவற்றை வைத்து, பிண்டம் கொடுத்து, ஜெயலலிதா மற்றும், பன்னீர்செல்வம் உருவ படங்களுக்கு திதி கொடுத்தனர். முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களையும், திதியில் வைத்திருந்தனர்.
இன்று அமாவாசை தினம் என்பதால், திதி கொடுக்க ஏற்ற தினம் என்று கன்னட அமைப்பினர் கூறினர். மேலும், வேண்டும், வேண்டும் மேக்கேதாட்டு வேண்டும், வேண்டும்.. என்று கோஷமிட்டனர். மேகேதாட்டு எங்களுடையது, காவிரி எங்களுடையது என்றும் கோஷமிட்டனர்.