படுகொலைக்கு எதிர்ப்பு- கன்னட எழுத்தாளர் ரஹமத் தரிகெரேவும் சாகித்ய அகாடமி விருதை ரிட்டர்ன் செய்தார்!
பெல்லாரி: பகுத்தறிவாளர்கள் கல்பர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலைகளைக் கண்டித்து கன்னட எழுத்தாளர் ரஹமத் தரிகெரேவும் சாகித்ய அகாடமி விருதை திருப்பி ஒப்படைத்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது வென்ற கன்னட எழுத்தாளர் கல்பர்கி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தாபோல்கர், கோவிந்த் பன்சாரே, ஆகிய பகுத்தறிவு சிந்தனையாளர்களை மதவெறி கும்பல் படுகொலைசெய்தது.
அத்துடன் அடுத்தது இவர்தான் படுகொலை செய்யப்படுவார் எனவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்ட சந்தேகத்தின் பேரில் முகமது இக்லாக் என்பவர் மதவெறியர்களால் அடித்தே படுகொலை செய்யப்படார்.
இத்தகைய குறைந்து வரும் சகிப்பு தன்மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், கொடூரமான ஆதிக்கம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதி காப்பதற்கு எதிராகவும் தமக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை நயன்தாரா ஷேகல் முதலில் திருப்பி கொடுப்பதாக தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பல அறிஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் கன்னட எழுத்தாளர் ரஹமத் தரிகெரேவும் சாகித்ய அகாடமி விருதை திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார்.