கெஜ்ரிவால் திகார் சிறைக்கு போவது உறுதி... கபில் மிஸ்ரா ஆவேசம்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை திகார் சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்று முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி அமைச்சராகவும் இருந்துவந்த கபில் மிஸ்ரா, அண்மையில் கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து, கபில் மிஸ்ரா, கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சப் பணம் வாங்கியதாவும், மேலும் பல ஊழல் முறைகேடுகளை செய்துள்ளார் எனவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இதற்கான ஆதாரம் எனக் கூறி, சில ஆதாரங்களையும் வெளியிட்டார். அத்துடன், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஐ வசம் புகாரும் அளித்துள்ளார். இது மட்டுமின்றி, கெஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகக் கூறிய அவர், நேற்று முன்தினம் அந்த போராட்டத்தை நிறைவு செய்துகொண்டார்.
ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த அந்த போராட்டத்தின் நிறைவாக, தற்போது நீதி கேட்டு, சிபிஐ மற்றும் மத்திய வருமான வரித்துறை அலுவலகம் போன்றவற்றில் மீண்டும் முறையீடு செய்ய உள்ளதாக, கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இன்று முதல் சட்டரீதியான போராட்டத்தை முழுவீச்சில் தொடங்குவதாகவும், கெஜ்ரிவாலை திகார் சிறைக்கு அனுப்புவது உறுதி எனவும் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.