ஜெ. விடுதலைக்கு எதிராக கர்நாடகா அப்பீல் போவதற்கு காரணமான கபில்சிபல், ப.சிதம்பரம்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்ததன் பின்னணியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கபிசிபல் மற்றும் ப.சிதம்பரமும்தான் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடகா அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வலியுறுத்தி வந்தார்.
ஆனால் கர்நாடகா அரசு தயக்கம் காட்டியே வந்தது. ஒரு கட்டத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடே செய்யாமல் போய்விடுமோ என்ற நிலைமையும் உருவானது. ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவே கூடாது கர்நாடகா காங்கிரசில் கலகக் குரலும் வெடித்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பார்வைக்குக் கொண்டு போகப்பட்டது. அவர் இது தொடர்பாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், உச்சநீதிமன்ற கிரிமினல் வழக்கறிஞருமான கபில்சிபல், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இருவருமே மிகவும் உறுதியாக, ஜெயலலிதாவை விடுதலை செய்ததில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது.. இதனால் இதில் மேல்முறையீடு என்பதுடன் நிற்காமல் ஜெயலலிதாவை விடுதலை செய்ததற்கும் தடைவிதிக்க வகை செய்ய வேண்டும் என்று உறுதிபட சோனியாவிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே கர்நாடகா அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சோனியா உத்தரவு பிறப்பித்ததாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால்தான் தற்போது ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மிக வலுவான வாதங்களுடன் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாம்..