கார்கில் போர் வெற்றி தினம்... அமர்ஜவான் ஜோதியில் அருண் ஜேட்லி மரியாதை
கார்கில் போர் 18ஆம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மரியாதை செலுத்தினார்.
டெல்லி: கார்கில் போரில் வெற்றி அடைந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மரியாதை செலுத்தினார்.
கடந்த 1999ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அங்குள்ள மலைப்பகுதியை ஆக்கிரமித்ததால் அந்த நாட்டு ராணுவத்துடன் இந்திய ராணுவத்தினர் போரிட்டனர்.
சுமார் 60 தினங்கள் நடைபெற்ற இந்த போரில் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்தியா வெற்றி பெற்றது. எனினும் இந்த போரில் ஏராளமான இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
போரில் உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், வெற்றியை வீரர்களுக்கு சமர்ப்பிக்கும் வகையிலும் அவர்களுக்காக டெல்லியில் அமைக்கப்பட்ட நினைவு இடமான அமர்ஜவான் ஜோதியில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்த ஆண்டும் இந்த கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார்.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.