தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதே நல்லது.. கர்நாடக அட்வகேட் ஜெனரல் யோசனை
பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி வீதம் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்தது கர்நாடக அரசு. மேலும் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி காவிரி நீர், குடிநீருக்கு மட்டும்தான் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது கர்நாடகா.
இதனிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழகத்திற்கு 27ந் தேதி முதல் முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு தலா 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு, விதானசவுதாவில் கர்நாடக மாநில அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வக்கீல்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி உள்ளிட்ட சட்ட வல்லுநர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது மதுசூதன் நாயக் தனது கருத்தை தெரிவிக்கையில், காவிரி நதிநீரின் நான்கு அணைக்கட்டுகளிலும் மொத்தம் 27.6 டிஎம்சி தண்ணீர் உள்ளது. சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி அடுத்த 3 நாட்களுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு விடுவித்தாலும் குடிக்க போதிய நீர் இருக்கும். எனவே உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மரியாதை கொடுத்து நீரை திறந்துவிட வேண்டும் என்றார். இவ்வாறு விடுவித்தால் உச்சநீதிமன்ற கோபத்தில் இருந்து தப்பலாம் என்பது, மதுசூதன் நாயக் கருத்து. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை பெய்துவருவதையும் மதுசூதன் நாயக் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இதை பாஜக, ம.ஜ.த உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அட்வகேட் ஜெனரல் கூறியபடியெல்லாம் முடிவெடுக்க முடியாது. அரசு எடுக்கும் முடிவை சுப்ரீம் கோர்ட்டில் திறம்பட எடுத்துச் சொல்ல யோசனை தெரிவித்தால் போதும் என்று கூறியுள்ளனர். இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.