காவிரி மேலாண்மை வாரிய பிரதிநிதியை பரிந்துரைக்க முடியாது: கர்நாடகா அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரிய பிரதிநிதியை பரிந்துரைக்க முடியாது என்று கர்நாடகா அரசு கூட்டிய இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்துக்கான 6,000 கன அடி நீரை திறக்கும் உத்தரவில் திருத்தம் கோரி புதிய மனு ஒன்றை கர்நாடகா இன்று தாக்கல் செய்துள்ளது.
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு காவிரியில் கடந்த செப்டம்பர் 21-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்கு பிறகு நடைமுறைப்படுத்தும்படி உத்தரவிடுமாறு கோரி கர்நாடக அரசு திருத்த மனு தாக்கல் செய்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இடைக்கால மனு தாக்கல் செய்தது.
பேச்சுவார்த்தை
இந்த மனுக்களை செப்டம்பர் 27-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளை மத்திய அரசு அழைத்து பேசவேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி நேற்று முன்தினம் டெல்லியில் இரு மாநில அரசுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
புதிய உத்தரவு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசை மிகக் கடுமையாக எச்சரித்த நீதிபதிகள், தமிழகத்துக்கு இன்று முதல் 6 நாட்கள் காவிரியில் 6,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலாண்மை வாரியம்
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கடுமையான கண்டனத்தை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். அத்துடன் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாளில் அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அனைத்து கட்சி கூட்டம்
உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு குறித்து இன்று கர்நாடகா அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருந்தது. இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் திறக்க உத்தரவிடும் உத்தரவில் திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனுத்தாக்கல் செய்தது.
மேலாண்மை வாரிய பிரதிநிதி இல்லை
இக்கூட்டத்தின் முடிவில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதியை கர்நாடகா பரிந்துரைக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதியான காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.