மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்து நடந்த 12 மணி நேர 'கர்நாடக பந்த்' முழு வெற்றி!
பெங்களூரு: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் தலையிடுவதை கண்டித்து கர்நாடகாவில் 500 அமைப்புகள் சார்பில் இன்று பந்த் நடைபெற்றது. இந்த பந்த்தால் தென் கர்நாடகாவில், குறிப்பாக, பெங்களூரு, மைசூரு மண்டலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
காவிரிக்கு குறுக்கே மேகதாது என்றபகுதியில் கர்நாடக அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு செல்லும் காவிரி நீர் தடுக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறி, தமிழகத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.
தமிழகத்து எதிர்ப்பால் கோபமடைந்துள்ள கர்நாடகாவும், பதிலுக்கு பந்த் நடத்த முடிவெடுத்துள்ளது. கர்நாடக ரக்ஷனாவேதிகே, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி உள்ளிட்ட கன்னட அமைப்புகள் மற்றும், திரைப்பட வர்த்தக சபை, டாக்சி சங்கம் உள்ளிட்ட 500 அமைப்பினர் இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. மாலை 6 மணிவரை பந்த் நடைபெற்றது. பொதுவாக காவிரி விவகாரங்களில் வட கர்நாடக மக்கள், பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. எனவே, தென் கர்நாடகாவின், பெங்களூரு, ராம்நகரம், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், கோலார், துமகூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில், பந்த் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திரைப்பட வர்த்தகசபை பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், கன்னட திரைப்பட சூட்டிங்குகள் நடைபெறவில்லை. தியேட்டர்களிலும் திரைப்படங்கள் காண்பிக்கப்படவில்லை. மாலை 6 மணிக்கு மேல்தான், தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கமும், ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தெரிவித்திருந்ததால், தமிழகத்துக்கு பஸ்கள் இயங்கவில்லை. அதேபோல, கல்வீச்சு அபாயம் காரணமாக, தமிழக பஸ்களும், கர்நாடகாவிற்கு இயக்கப்படவில்லை. எனவே, தமிழகம்-கர்நாடகா இடையேயான போக்குவரத்து இன்று பகல் முழுவதும் ஸ்தம்பித்தது. மாலை 6 மணி முதல் பஸ்கள் வழக்கம் போல இயங்கின.
மேக்சி கேப் சங்கத்தினர் ஆதரவு அளித்துள்ளதால், இன்று ஏர்போர்ட்டுகளுக்கு டாக்சி சேவை அளிக்கப்படவில்லை. எனவே, ஏர்போர்ட் வந்திறங்கிய பயணிகள், அங்கேயே காத்திருக்க வேண்டியதாயிற்று.