தமிழக அரசை கண்டித்து பகலில் தமிழ் சேனல்களை 'கட்' செய்த கர்நாடக கேபிள் ஆபரேட்டர்கள்
பெங்களூரு: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் பந்த்துக்கு எதிர்ப்பு தெரித்துள்ள கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், பகல் நேரத்தில் தமிழ் சேனல்களை முடக்கிவிட்டனர்.
காவிரி விவகாரத்தில், தமிழகம் நடத்தும் பந்த்தால் கர்நாடக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் கோபத்தில் ஆழ்ந்துள்ளன. எனவே தமிழகத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளன.
இதில் கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்களும் கை சேர்த்துள்ளனர். தமிழ் சேனல்களை அவர்கள் பிளாக் செய்து வைத்துள்ளனர். சிட்டி கேபிள் போன்ற முன்னணி கேபிள் நிறுவனங்கள் இதில் கை கோர்த்துள்ளன. ஆனால் ஒரு சில கேபிள் ஆபரேட்டர்கள் இதுவரை கேபிளில் தமிழ் சேனல்களை கட் செய்யவில்லை.
தலைநகர், பெங்களூருவை பொறுத்தளவில் லட்சக் கணக்கில் தமிழர்கள் வசிக்கிறார்கள். அந்த தமிழர்கள், தமிழ் சேனல்களை பார்க்க முடியாமல் அவதிப்பட்டனர். இருப்பினும், மாலை 5 மணிக்கு மேல் கேபிளில் மீண்டும் தமிழ் சேனல்கள் காண்பிக்கப்பட்டன.
இருப்பினும் டிடிஎச் சேவைகளை பயன்படுத்தி வருவோர், இந்த பிரச்சினையில் இருந்து தப்பியபடி, வழக்கம்போல மெகா சீரியல்களை கண்டு ரசித்தனர்.