உபி அரசு கெஸ்ட் ஹவுசில் கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம்- கொலையா? என போலீஸ் விசாரணை
உ.பி. மாநிலம் அரசு விருந்தினர் மாளிகையில் இளம் ஐஏஎஸ் அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் அரசு விருந்தினர் மாளிகையில் கர்நாடகாவைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி இறந்து கிடந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பீதியை உண்டாக்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதனையடுத்து யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அதிகாரிகள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பிவருகிறார்.
சரியான நேரத்துக்கு அரசு அதிகாரிகள் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்பது தொடங்கி, முதல்வர் கட்டுப்பாட்டிலேயே காவல்துறையை வைத்துக்கொள்வது, மக்கள் பிரச்சனைகளை நேரடியாக கவனித்து தீர்ப்பது வரை பல்வேறு அதிரடியை யோகி செய்துவருகிறார்.
யோகியின் அதிரடிகள் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு தரப்பினரும் பாராட்டும் வண்ணம் இருந்தாலும் சில விஷயங்கள் அவருக்கு நெருக்கடியை உண்டாக்கிவிடுமோ என்ற வகையில் நடந்துவருவதாக பாஜகவினர் பரபரக்கின்றனர்.
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி
இந்தச் சூழலில் உத்தரபிரதேச அரசில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுராக் திவாரி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவருக்கு வயது 35. அனுராக் திவாரி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மர்ம மரணம்
2007ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த இவர் கடந்த 2015ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் துணை ஆணையராக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை லக்னோவில் உள்ள ஹஸரத்கஞ்ச் அரசு விருந்தினர் மாளிகையில் மர்மமான முறையில் அனுராக் திவாரி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கொலையா தற்கொலையா ?
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் இறப்புக்கு காரணம் என்ன? கொலையா, தற்கொலையா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரடைப்பில் மரணம்?
முதல் கட்ட விசாரணையில் திடீர் மாரடைப்பு காரணமாக அனுராக் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பரில் ஒருவர் மரணம்
அதே போல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் துபே அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 1987ல் ஐஏஎஸ் பயிற்சி முடித்த சஞ்சீவ் முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பீதியில்...
இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்து சஞ்சீவ் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது மீண்டும் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் மர்மமான முறையில் மரணமடைவது உத்தரபிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.