இனி வாதாடவே மாட்டேன் என நாரிமன் சொல்லலையே... கர்நாடக அரசு விளக்கம்!
பெங்களூர்: காவிரி தொடர்பான வழக்கில் கர்நாடகா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் இனி வாதிடப்போவதில்லை என தகவல்கள் வெளியானது. அதை அரசு மறுத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்ற காவிரி பங்கீடு வழக்கில், தமிழகம் சார்பில் சேகர் நாப்தே ஆஜரான நிலையில், கர்நாடகா சார்பில் ஃபாலி நாரிமன், வழக்கில் ஆஜரானார். நாரிமன் வாதிடுகையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தன்னிடம் கொடுத்த கடிதத்தை அப்படியே வாசித்தார். சட்டசபை தீர்மானத்தின் அடிப்படையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க சித்தராமையா தயார் இல்லை என்றும், அதேநேரம் கோர்ட் மீது கர்நாடக அரசு, மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும் நாரிமன் கூறினார்.
மேலும், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத வரை, நான் கர்நாடகா தரப்பில் வாதிடப்போவதில்லை என்றும் நாரிமன் கூறிவிட்டார். இப்படி திடீரென, கர்நாடகாவை நாரிமன் கைவிட்டார். இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ம் தேதிக்குள், அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையறிந்த கர்நாடக மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நாரிமன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் இதை கர்நாடக அரசு மறுத்துள்ளது. இன்றைக்குதான் வாதிட மறுத்து நாரிமன் அமர்ந்துவிட்டதாகவும், அவர் ராஜினாமா செய்யவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் நாரிமனுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
விசாரணை நேரம் முடிந்த பிறகு நாரிமனிடம், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.