காவிரி மேலாண்மை வாரியம் அமையாமல் தடுக்க வேண்டும்.. உமா பாரதியிடம் சித்தராமையா நேரில் வலியுறுத்தல்
பெங்களூர்: காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க நாளை கர்நாடக சட்டசபை கூட்டுக் கூட்டத்தை கூட்ட அம்மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று முடிவு செய்தது. எனவே ஆளுநர் வஜுபாய் வாலாவை இன்று சந்தித்து, நாளை சிறப்பு சட்டசபையை கூட்டுவதற்கு கோரிக்கை விடுத்தார் சித்தராமையா.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்று கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று முடிவு செய்தது. சிறப்பு சட்டசபையை கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நாளை சிறப்பு சட்டசபை கூட்டம் கூடுகிறது.
சட்டசபையை கூட்ட ஆளுநர் அனுமதி தேவை என்பதால், இன்று காலை மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து சட்டசபையை கூட்ட கோரிக்கைவிடுத்தார், சித்தராமையா. சீனியர் அமைச்சர்கள் அப்போது உடனிருந்தனர். சட்டசபை கூட்டத்தை கூட்ட ஆளுநர் அனுமதியளித்துள்ளார். நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது.
இதையடுத்து, பெங்களூர்-சதாசிவநகர் பகுதியிலுள்ள முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்கு சென்ற சித்தராமையா அவரிடம் ஆலோசனைகள் பெற்றார்.
இதன்பிறகு இன்று மதியம், சிறப்பு விமானத்தில் டெல்லி சென்ற சித்தராமையா, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்தார். அவருக்கு ஸ்நாக்ஸ், காபி கொடுத்து உபசரித்தார் உமாபாரதி. இந்த ஆலோசனை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. கர்நாடக நீர்வள அமைச்சர் எம்.பி.பாட்டில், மின்சார துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோரும் அப்போது உடனிருந்தனர்.
Delhi: Karnataka Chief Minister Siddaramaiah meets Union Water Resources Minister Uma Bharti. pic.twitter.com/RaeYtb0RUo
— ANI (@ANI_news) September 22, 2016
இந்த சந்திப்பின்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்பது முக்கிய கோரிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளது. தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக உமா பாரதி வாக்குறுதியளித்ததாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உமாபாரதியை நேற்று கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்தகவுடா சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.