சசிகலாவுக்கு வசதி செய்து கொடுத்தது கர்நாடக காங். தலைவர்: அதிமுக நிர்வாகி பரபர பேட்டி
பெங்களூர்: கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவருமான ஜி.பரமேஸ்வர்தான் சசிகலாவுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துள்ளார் என கர்நாடக அதிமுக இளைஞர் பிரிவு செயலாளர் அன்புவேல் (ஓபிஎஸ் கோஷ்டி), குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் சில ஊடகங்களிடம் அவர் கூறுகையில், அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்திக்கும் (அதிமுக அம்மா அணி), கர்நாடக மாஜி உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கும் நல்ல நட்புறவு உண்டு. பெங்களூரில், புகழேந்தி வீட்டில் இல்லாவிட்டால், பரமேஸ்வர் வீட்டில்தான் இருப்பார். இதை பயன்படுத்தி சசிக்கு சொகுசு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
கர்நாடக சிறை அதிகாரிகளிடம் பரமேஸ்வர்தான் பேசியுள்ளார். அவர் அறிவுரையின் பேரிலேயே சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் உள்ளது. இவ்வாறு அன்புவேல் கூறினார்.
இக்குற்றச்சாட்டை பரமேஸ்வர் மறுத்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறும் அவர், முதல்வர் சித்தராமையா அமைத்துள்ள விசாரணை குழு முழு உண்மைகளையும் வெளிக்கொண்டுவரத்தான் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
சசிகலா சிறையில் அடைக்கப்பட்டபோது கர்நாடக உள்துறை அமைச்சராக இருந்தவர் பரமேஸ்வர்தான். அவர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். தேர்தல் நெருங்கும் நிலையில், இரண்டில் ஒரு பதவியை துறக்க மேலிடம் உத்தரவிட்டதால் அமைச்சர் பதவியை துறந்து தற்போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார் பரமேஸ்வர்.