பணம் உள்ளதா என சோதனை.. கர்நாடக முதல்வர் சித்தராமையா காரில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி ரெய்டு
மைசூரு: நஞ்சன்கூடுவுக்கு பிரசாரம் செய்ய சென்ற போது முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கார்களை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் வருகிற 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், மதுவினியோகம் செய்வதை தடுத்து நிறுத்தவும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படையில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் அடங்கியுள்ளனர். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
பறக்கும்படை
இந்த நிலையில் குண்டலுபேட்டை தாலுகா பேகூர் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக குண்டலுபேட்டையில் இருந்து நஞ்சன்கூடுவுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய செல்வதற்காக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தனித்தனி கார்களில் சென்று கொண்டு இருந்தனர்.
வி.வி.ஐ.பிகள் கார்கள்
அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் சித்தராமையா, பரமேஸ்வர், மல்லிகார்ஜுன கார்கே ஆகிய 3 பேரின் கார்களையும் நிறுத்தினர். மேலும் கார்களில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் எடுத்து செல்லப்படுகிறதா என்று சோதனை நடத்தினர். ஆனால் கார்களில் பணம் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் சித்தராமையா, பரமேஸ்வர், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் கார்களை நஞ்சன் கூடுவுக்கு செல்ல அனுமதித்தனர்.
பரபரப்பு
முதல்வர், அமைச்சர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான கார்கே ஆகிய 3 பேரின் கார்களையும் நிறுத்தி போலீசார் சோதனை நடத்தியதால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக பிரமுகர்கள்
தேர்தல் அதிகாரிகள் அத்தோடு நிறுத்தவில்லை. கட்சி வேறுபாடு காட்டவில்லை. பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவின் காரிலும் சோதனைபோட்டனர். நஞ்சன்கூடுவில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ்ஷெட்டர், மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஆகியோரது கார்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ஆனால் கார்களில் பணம் உள்ளிட்ட எந்த பொருட்களும் இல்லை. சோதனைக்கு பின்னர் அவர்கள் நஞ்சன்கூடு பகுதிக்கு சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.