பெங்களூர் மாநகராட்சி தேர்தலை மனதில் வைத்து ஜெ. வழக்கில் பம்முகிறதா கர்நாடகா?
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்யாமல் இருக்க பெங்களூர் மாநகராட்சி தேர்தல் காரணம் என்று வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள் இதை மறுக்கிறார்கள்.
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் கர்நாடக அரசு இழுத்தடிப்பு செய்கிறது. இதற்கு காங்கிரஸ் மேலிடம் பச்சைக்கொடி காட்டாததே காரணம் என்று கிசுகிசுக்கப்படும் நிலையில், புதிதாக ஒரு வதந்தி பரப்பப்படுகிறது.
பெங்களூர் தமிழர்கள்
அதாவது, பெங்களூரில் தமிழர்கள் கணிசமான அளவில் வசிக்கிறார்கள். பெங்களூர் மாநகராட்சியில் வெற்றித் தோல்வியைக் கணிக்கும் சக்தியாக தமிழர்கள் இருப்பதால், அம்மாநில அரசியல் கட்சிகள் தமிழர்களை இழுப்பதில் போட்டிப் போட்டு வேலை செய்து வருகின்றன.
இதுதான் காரணமா
இந்நிலையில், ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி, ஜெயலலிதா வழக்கில் அவசரப்பட்டு மேல்முறையீடு செய்வதன் மூலம் பெங்களூரு தமிழ் வாக்களர்களின் அதிருப்தியை சம்பாதித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இதன் காரணமாகவே மேல்முறையீட்டில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் மாநகர தேர்தல்
பெங்களூர் மாநகராட்சியின் பதவிக்காலம் முடிந்து தற்போது அதிகாரிகளின் ஆட்சியை அரசு அமல்படுத்தியுள்ளது. விரைவில் தேர்தல் தேதி வெளியாக உள்ளது. இதை வைத்து இப்படி ஒரு வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால், இதை கர்நாடக அதிமுகவினரே நம்பமாட்டார்கள் என்பதுதான் உண்மை என்கின்றனர் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக கட்சிகளுக்கு செல்வாக்கில்லை
ஏனெனில் தமிழக அரசியல் சூழ்நிலைக்கும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக அரசியல் சூழ்நிலைக்கும் எப்போதுமே தொடர்பு இருந்ததில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள். பெங்களூர்வாழ் தமிழர்கள், கர்நாடக அரசியல் சூழ்நிலையை வைத்துதான் வாக்களிப்பது வரலாற்றுரீதியாக வழக்கம் என்று கூறும் அரசியல்பார்வையாளர்கள், தமிழக அரசியல் கட்சிகள் எதுவுமே கடந்த பல ஆண்டுகளில், பெங்களூரில் தமிழர்கள் 80 சதவீதம் வசிக்கும் சட்டசபை தொகுதிகளில் கூட டெபாசிட் வாங்கியது கிடையாது என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
காமெடி
நிலைமை இப்படி இருக்க, ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், காங்கிரசுக்கு ஓட்டு கிடைக்காது என்பததெல்லாம் சுத்த காமெடி என்று தெரிவிக்கின்றனர். ஏனெனில் தமிழர்கள் அனைவருமே ஜெயலலிதா ஆதரவாளர்களும் கிடையாது. திமுக, பாமக மட்டுமின்றி, பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின் ஆதரவாளர்களும் கணிசமாக உள்ளனர். எனவே இது ஒரு விஷயமே கிடையாது என்கின்றனர் கர்நாடக அரசியல் பார்வையாளர்களும், மூத்த பத்திரிகையாளர்களும்.