தேசிய கீதம் பாடுகையில் மேடையில் இருந்து கிளம்பிய கர்நாடக ஆளுநர்
பெங்களூர்: ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடுகையில் கர்நாடகா ஆளுநர் வாஜுபாய் வாலா மேடையில் இருந்து நடந்து சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ராகவேந்திர சிங் சவுஹானுக்கு அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா செவ்வாய்க்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள ராஜ் பவனில் நடைபெற்றது. சவுஹானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த உடன் நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது.
அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை அளித்தனர். ஆனால் ஆளுநர் வாஜுபாய் தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்கையில் மேடையில் இருந்து கிளம்பிச் சென்றார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே வாஜுபாயின் உதவியாளர்கள் அவரிடம் தேசிய கீதம் ஓடிக் கொண்டிருப்பதை தெரிவித்ததும் அவர் மீண்டும் வந்து மேடையில் நின்றார். வாஜுபாயின் செயலை பார்த்து மேடையில் இருந்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச். வகேலா, நீதிபதி சவுஹான், தலைமைச் செயலாளர் கௌசிக் முகர்ஜி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆளுநரின் செயல் குறித்து ராஜ் பவன் விளக்கம் அளிக்கவில்லை. ஆளுநர் தேசிய கீதம் பாடுகையில் நடந்து சென்றது டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.