ஊழல்களை விசாரிக்கும் லோக்ஆயுக்தா நீதிபதி மகன் மீதே ஊழல் புகார்.. விசாரணை குழு அமைத்த அரசு!
பெங்களூர்: ஊழல் புகார்களை விசாரிக்கும், லோக்ஆயுக்தா அமைப்பின் நீதிபதி மகன் மீதே ஊழல் புகார் எழுந்துள்ளது கர்நாடகாவில். இதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது அம்மாநில அரசு.
கர்நாடகாவில் லோக்ஆயுக்தா அமைப்பு திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நீதிபதிகள் செயல்பட்டு வருகின்றனர். வெங்கடாச்சலய்யா, சந்தோஷ் ஹெக்டே போன்றோர், இவ்வமைப்பின் நீதிபதிகளாக இருந்து பெரும் அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் வீடுகளில் ரெய்டுகளை நடத்தி பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு சாதித்துள்ளனர்.
லோக்ஆயுக்தாவின் தற்போதைய நீதிதியாக பதவி வகிப்பவர், கர்நாடக ஹைகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி பாஸ்கர் ராவ். லோக் ஆயுக்தா நீதிபதியாக பாஸ்கர் ராவ் பதவியேற்றது முதல், ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று புகார்கள் வலுத்தன. முறைகேடு புகாரில் சிக்கி, லோக் ஆயுக்தா அலுவலகத்துக்கு வருவோரிடம், அவரது மகன் அஸ்வின், பணம் கேட்டு போன் செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது. இதையடுத்து பல புகார்களை, உப லோக்ஆயுக்தா நீதிபதி, சுபாஷ் ஆதியே விசாரணை செய்தார். சில புகார்கள் மீது விசாரணை செய்யுமாறு, லோக் ஆயுக்தா எஸ்.பி. சோனியா நாரங்கிற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், லோக்ஆயுக்தா போலீஸ் எஸ்.பி சோனியா நாரங்கிடம் ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகார்தாரர், லோக்ஆயுக்தா ஆபீசில் இருந்து ஒரு அதிகாரி தன்னை தொடர்புகொண்டு, தனது சொத்துக்களை ரெய்டு செய்யாமல் இருக்க ரூ.1 கோடி தர வேண்டும் என்று மிரட்டுவதாக கூறியுள்ளார். இந்த ஒரு கோடி ரூபாய் லஞ்ச விவகாரம் குறித்து, சி.சி.பி. காவல்துறை, விசாரணை செய்ய, லோக் ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவ் உத்தரவிட்டார். இதை ஏற்காத, உபலோக் ஆயுக்தா நீதிபதி சுபாஷ் ஆதி, நிருபர்களிடம் கூறியதாவது: லோக் ஆயுக்தா அலுவலகத்துக்கு எதிராக, புகார் வரும் போது, அதை, லோக் ஆயுக்தா விசாரணை நடத்தக்கூடாது. லோக் ஆயுக்தா கட்டுப்பாட்டில் விசாரணை குழு இருந்தால், எப்படி உண்மை வெளிவரும் என, மக்கள் சந்தேகப்படுவர்.
இப்புகாரை சி.சி.பி.,க்கு வழங்குவதற்கு முன், இரு நாட்கள் பாஸ்கர் ராவ் பொறுத்திருக்க வேண்டும். இவ்வழக்கை விசாரிக்க, சி.சி.பி., அதிகாரம் உள்ளதா என்பதை என்னால் கூற முடியாது. ஆனால், லஞ்ச புகார் என்று வரும் போது, அதை லோக் ஆயுக்தா அல்லது சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த, எழுத்துப் பூர்வமாக, லோக் ஆயுக்தா எஸ்.பி., சோனியா நாரங்கிற்கு உத்தரவிட்டுள்ளேன்.
விசாரணையில் வரும் தகவல்களை வைத்து முடிவெடுக்கலாம் என, பாஸ்கர் ராவிடம் தெரிவித்திருந்தேன். உடன்பாடு இல்லை. ஆனால், அவசர அவசரமாக, இந்த விசாரணையை சி.சி.பி.,யிடம் ஏன் ஒப்படைத்தார் என தெரியவில்லை. இதில் எனக்கு உடன்பாடும் இல்லை. இந்த விசாரணையை அரசின் உத்தரவின்படி, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில், பாஸ்கர் ராவ் பதவி விலக வேண்டும் என்று மாநில அளவில் போராட்டங்கள் நடக்கின்றன. இதுகுறித்து பாஸ்கர் ராவிடம் கேட்டபோது, "நான் எந்த தப்பும் செய்யவில்லை., எனது குடும்பத்தாருக்கும் தொடர்பில்லை. இப்போதெல்லாம், யார் மீதாவது சேற்றை வாரி இறைத்துவிட்டு, பதவி விலக கேட்பது பேஷனாகிவிட்டது. நான் பதவி விலகபோவதில்லை" என்றார்.
இதனிடையே, சர்ச்சை குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளது மாநில அரசு. கர்நாடக சிட்டிங் நீதிபதி யாருடைய தலைமையிலாவது இதுபற்றிய விசாரணை நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.