விதிமுறைகளை மீறியதாக சசிகலா மீது குற்றம்சாட்டிய அதிகாரி ரூபாவுக்கு கர்நாடக அரசு நெருக்கடி!
பெங்களூர்: பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த 'குற்றத்திற்காக' ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது கர்நாடக அரசு.
பெங்களூர் மத்திய சிறையில் உள்ள சசிகலா உள்ளிட்டோருக்கு பணத்தை பெற்றுக்கொண்டு சலுகைகள் செய்து கொடுத்துள்ள தகவலை போலீஸ் டிஜிபிக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தினார் சிறைத்துறை டிஐஜி ரூபா.
இந்த கடித விவகாரம் ஊடகங்களில் லீக்கானது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ரூபா அவ்வப்போது நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ரூபாவுக்கு நோட்டீஸ்
இவ்வாறு ரூபா பேட்டியளித்துவந்த நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை முதல்வர் சித்தராமையா இன்று தெரிவித்தார்.
அரசிடம் கூறியிருக்கலாம்
சித்தராமையா கூறுகையில், "சிறையில் முறைகேடு நடப்பது தெரியவந்தால், அதை உயர் அதிகாரிகள் கவனத்திற்கோ அல்லது அரசின் கவனத்திற்கோ ரூபா கொண்டுவந்திருக்க வேண்டும். அதைவிடுத்து நேரடியாக பத்திரிகைகளை நாடிவிட்டார் ரூபா. அதிகாரிகள் நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது என்பது விதிமுறை. இந்த விதிமுறையை மீறியதற்காக ரூபாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்கட்டும்
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த ரூபா, தான் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுத்துக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார். தான் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதம் கன்னட சேனலில் முதலில் வெளியானதாகவும், அது எப்படி என தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.
குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ரூ.2 கோடியை சிறைத்துறை டிஜிபிக்கு வழங்கி சிறப்பு மாடுலர் கிச்சன் உள்ளிட்ட சலுகைகளை அனுபவித்து வந்ததாக ரூபா தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவருக்கே கர்நாடக அரசு நெருக்கடி கொடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, ரூபாவின் செயலை டிவிட்டரில் பாராட்டியுள்ளார். அவருக்கு ரூபா நன்றி தெரிவித்துள்ளார்.