இன்ஜினியர் வீட்டில் ரெய்டு நடத்தாமல் இருக்க 1 கோடி லஞ்சம்.. நீதிபதி மகன் மீது எப்.ஐ.ஆர்!
பெங்களூர்: லஞ்சம் கேட்டு மிரட்டியதாக கர்நாடக லோக்-ஆயுக்தா நீதிபதியின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் லோக்-ஆயுக்தா அமைப்பு திறம்பட செயல்பட்டு வந்தது. லோக்-ஆயுக்தாவின் தற்போதைய நீதிதியாக பதவி வகிப்பவர், கர்நாடக ஹைகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி பாஸ்கர் ராவ். லோக்-ஆயுக்தா நீதிபதியாக பாஸ்கர் ராவ் பதவியேற்றது முதல், ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று புகார்கள் வலுத்தன.
முறைகேடு புகாரில் சிக்கி, லோக்-ஆயுக்தா அலுவலகத்துக்கு வருவோரிடம், அவரது மகன் அஸ்வின் (என்ற) கிருஷ்ண ராவ், பணம் கேட்டு போன் செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது. இதையடுத்து பல புகார்களை, உப லோக்ஆயுக்தா நீதிபதி, சுபாஷ் ஆதியே விசாரணை செய்தார். சில புகார்கள் மீது விசாரணை செய்யுமாறு, லோக் ஆயுக்தா எஸ்.பி. சோனியா நாரங்கிற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், லோக்-ஆயுக்தா போலீஸ் எஸ்.பி சோனியா நாரங்கிடம் ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகார்தாரர், பொதுப்பணித்துறை இன்ஜினியரான கிருஷ்ணமூர்த்தி என்பவராகும். அவர் தனது புகாரில், லோக்ஆயுக்தா ஆபீசில் இருந்து ஒரு அதிகாரி தன்னை தொடர்புகொண்டு, தனது சொத்துக்களை ரெய்டு செய்யாமல் இருக்க ரூ.1 கோடி தர வேண்டும் என்று மிரட்டுவதாக கூறியுள்ளார்.
இந்த ஒரு கோடி ரூபாய் லஞ்ச விவகாரம் குறித்து, சி.சி.பி. காவல்துறை, விசாரணை செய்ய, லோக்-ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவ் உத்தரவிட்டார். இதை ஏற்கவில்லை, துணை லோக்-ஆயுக்தா நீதிபதி சுபாஷ் ஆதி. எனவே, சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு மாநில அரசு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக நேற்று விசாரணை நடத்திய, கர்நாடக ஹைகோர்ட், மாநில அரசு உத்தரவிட்டபடியே விசாரணை நடைபெற வேண்டும். லோக்-ஆயுக்தாவே விசாரணை நடத்த கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவு வெளியாகும் முன்பே, லோக்-ஆயுக்தா எஸ்.பி சோனியா நாரங் உத்தரவின்பேரில், அஸ்வின் மீது, ஊழல் தடுப்பு சட்டம், மிரட்டல், ஏமாற்று முயற்சி, ஏமாற்றுதல், திட்டமிட்ட கிரிமினல் செயல் போன்ற பல பிரிவுகளின்கீழ் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. ஹைகோர்ட் உத்தரவு வேறு மாதிரி வந்துள்ளதால், அரசு அமைத்த விசாரணை அமைப்பு தநது விசாரணையை தொடங்கும்போது, இந்த வழக்கு அவர்களிடம் மாற்றிவிடப்படும் என்று லோக்-ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.