லோக்-ஆயுக்தா நீதிபதியை பதவி நீக்கம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டம்: கர்நாடக அரசு அதிரடி முடிவு
பெங்களூர்: கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவ் மகன் மீதான ஊழல் புகாரை தொடர்ந்து அவரை பதவியை விட்டு தூக்க மாநில அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளது.
ஊழல் புகாரில் சிக்கியோர்களிடம், லஞ்சம் வாங்கிக்கொண்டு லோக்ஆயுக்தா ரெய்டு நடத்தாமல் தடுப்பதாக அந்த அமைப்பின் நீதிபதியான பாஸ்கர் ராவ் மகன், அஸ்வின் ராவ் மீது ஊழல் புகார் எழுந்தது. இதுகுறித்த பல கட்ட விசாரணைகளில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது.
எனவே பாஸ்கர் ராவை பதவி விலக கோரியும், அல்லது மாநில அரசே அவரது பதவியை பறிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
ஏற்கனவே இருந்த சட்டத்தில், லோக்ஆயுக்தா நீதிபதி பதவியை பறிக்க இடமில்லை. எனவே, கடந்த மாதம், கர்நாடக லோக்ஆயுக்தா திருத்த சட்டம்-2015 என்ற பெயரிலான சட்டத்திருத்தத்தை பேரவையில் நிறைவேற்றியது ஆளும் காங்கிரஸ் அரசு. இதன்மூலம், பேரவையில் 3ல் 2 பங்கு உறுப்பினர் ஆதரவு இருந்தால், லோக்ஆயுக்தா நீதிபதி பதவியை பறிக்க முடியும்.
எனவே, அடுத்த மாதம், சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி, பாஸ்கர் ராவ் பதவியை பறிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பாஸ்கர் ராவ் விடுப்பில் உள்ளார். இம்மாதம் 31ம் தேதிவரை அவர் விடுப்பில் சென்றுள்ளார். பணிக்கு திரும்பியதும் அவரே ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது அரசு சிறப்பு பேரவை கூட்டம் நடத்தி பதவியை பறித்து நாட்டுக்கு முன்மாதிரியான நடவடிக்கையை எடுக்கும்.