காவிரி போராட்டங்களால் கர்நாடகாவுக்கு ரூ.40,000 கோடி நஷ்டம்: மேலவையில் பாஜக உறுப்பினர் சீற்றம்
பெங்களூர்: காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது.
இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.
மேலவையில், எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா (பாஜக) பேசியது: காவிரி பிரச்சினைகள் பலவற்றை நான் பார்த்துள்ளேன். ஆனால் இம்முறை கர்நாடக மக்கள் தற்கொலை செய்து கொண்டதை போன்ற போராட்டத்தை முன்னெடுத்தனர். பஸ் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மூலம், கர்நாடகாவுக்கு குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டமாகியுள்ளது.
நமது சொத்தை நாமே நாசம் செய்துள்ளோம். தண்ணீருக்காக இந்த அளவுக்கு போராடியுள்ளோம். அப்படியும் மனிதாபிமான அடிப்படையில் கூட தமிழகம் நமது கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.
தெருவில் போகும் சாமானியரிடம் போய், குடிக்க தண்ணீர் இல்லாத போது பக்கத்து மாநில விவசாயத்திற்கு தண்ணீர் விட வேண்டுமா என்று கேட்டால் அவன் சிரிப்பான். சுப்ரீம் கோர்ட், வக்கீல் வாதம் என்பதெல்லாம் யாருக்கும் புரியாது. குடிக்க தண்ணீர் முக்கியம் என்பது மட்டுமே வாதம்.
கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும், பாஜக ஒத்துழைக்கும். இவ்வாறு ஈஸ்வரப்பா தெரிவித்தார்.