மேகதாது: சித்தராமையா தலைமையில், ஏப்.22-ல் மோடியை சந்திக்கிறது கர்நாடக அனைத்து கட்சி குழு!
பெங்களூரு: மேகதாது விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 22ம்தேதி அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
இதுகுறித்து இன்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:
மேகதாது அணைகட்டுவது தொடர்பாக, இன்னும் ஒரு வாரத்தில், நீர்வள அதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளேன்.
இன்னும் ஆறு மாதங்களில் மேகதாது அணைக்கட்டு தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிடும். அதையடுத்து, திட்ட அறிக்கையை, மத்திய அரசு, மத்திய வனத்துறை, மத்திய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி அனுமதி கேட்போம்.
அனுமதிகள் கிடைத்ததும், உடனடியாக, மேகதாதுவில் அணை கட்டப்படும். எனவே அணை கட்டும் பணிகள் இன்னும் ஓராண்டில் தொடங்க வாய்ப்புள்ளது.
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாட்டை, பிரதமர் மோடியிடம், சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சி குழு எடுத்துரைக்க உள்ளது. பிரதமரை சந்திக்க வரும் 22ம்தேதி கால அவகாசம் கேட்டுள்ளோம். அவர் நேரம் ஒதுக்கியதும், அனைத்து கட்சி குழுவுடன் முதல்வர் சித்தராமையா டெல்லி சென்று மோடியை சந்திப்பார். இவ்வாறு எம்.பி.பாட்டில் தெரிவித்தார்.