தமிழகத்துக்கு "அம்மா".. கர்நாடகத்திற்கு "அன்னா"... 5 ரூபாய்க்கு இட்லி, வடை வாங்கி சாப்பிடலாம்!
பெங்களூரு: தமிழகத்தில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவகத்தைப் போல கர்நாடகத்தில் மலிவு விலை "அன்னா" திட்டத்தை அறிவித்துள்ளது அந்த மாநில அரசு.
அன்னா என்றால் கன்னடத்தில் சாப்பாடு என்று அர்த்தம்.
ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மலிவு விலையில் உணவு அளிக்கும் வகையில் முதலில் சென்னையில் அம்மா உணவகத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதைத் தொடங்கி வைத்தார். இங்கு மலிவு விலையில் பொங்கல், இட்லி, வடை, லெமன் ரைஸ், தயிர் சாதம், சப்பாத்தி, பூரி உள்ளிட்ட பல வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் இது விரிவுபடுத்தப்பட்டு அமோகமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டம் பிற மாநிலங்களையும் ஈர்த்துள்ளது. பல மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அம்மா உணவகங்களுக்கு வந்து நேரில் பார்த்துச் செல்கின்றனர்.
கர்நாடகத்தில் அன்னா
இந்த நிலையில் அம்மா உணவகத்தைக் காப்பி அடித்து தற்போது கர்நாடகத்தில் அன்னா திட்டத்தை அந்த மாநில அரசு அமல்படுத்தவுள்ளது.
5 ரூபாய்க்கு உப்புமா, சாதம், இட்லி
அந்த வகையில், இந்த அன்னா உணவகத் திட்டத்தின் கீழ் 5 ரூபாய்க்கு இட்லி, உப்புமா, சாதம் போன்றவை வழங்கப்படும்.
சி.எம்.இப்ராகிம்
இந்தத் திட்டத்தை மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவர் சி.எம்.இப்ராகிம் முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் இந்த அன்னா திட்டம் குறித்தும் இப்ராகிம் விவரித்தார்.
வருடத்திற்கு ரூ. 60 கோடி செலவு
இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு வருடத்திற்கு ரூ. 60 கோடி செலவிடவுள்ளது என்று கூறிய இப்ராகிம், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும் பட்டியலிட்டார்.
என்னென்ன தருவார்கள்...!
5 ரூபாய் விலைக்கு உப்புமா, சித்திரான்னா (அதாவது எலுமிச்சம் சாதம்), புளியோதரை, தயிர் சாதம் ஆகியவை விற்பனை செய்யப்படும். இந்த மலிவு விலை உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.
பட்ஜெட்டில் சேர்க்கப்படும்
இந்த அன்னா உணவகத் திட்டத்தை இந்த மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிலேயே சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் இப்ராகி்ம் தெரிவித்தார்.
எங்கெங்கு உணவகம்
முதலில் தலைநகர் பெங்களூருவில் 20 உணவகங்கள் அமைக்கப்படும். தொடர்ந்து மங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளி (ஹூப்ளி) - தார்வாட் மற்றும் கலபரகி ஆகிய நகரங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்படுமாம்.
மருத்துவமனை அருகே
மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், பஸ் நிலையங்களுக்கு அருகே இந்த உணவகங்கள் திறக்கப்படும். இந்த உணவகங்கள் மூலமாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் இப்ராகிம் தெரிவித்தார்.