இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் முதுகெலும்பாக இருக்கும் சட்டவிரோத கர்நாடக குவாரிகள்
பெங்களூர்: சட்டவிரேதமாக செயல்படும் குவாரிகள் தான் தீவிரவாத அமைப்புகளுக்கு வெடிபொருட்கள் கிடைக்கும் இடமாக ஆகியுள்ளது. இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சிலர் இந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கர்நாடகாவில் உள்ள சில சட்டவிரோத குவாரிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு மற்றும் 13/7 தாக்குதல்களை நடத்தும் முன்பு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளான யாசின் பட்கல் மற்றும் அசாதுல்லா அக்தர் ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் சில குவாரிகளுக்கு சென்று வெடிபொருட்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்கு வெடிபொருட்கள் வழங்கிய சட்டவிரோத குவாரிகளின் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சட்டவிரோதமாக குவாரிகள் நடத்துவோரிடம் தமிழகத்தைச் சேர்ந்த க்யூ பிரிவு போலீசார் அண்மையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சட்டவிரோத சக்திகளிடம் இருந்து வெடிபொருட்களை வாங்கி அதை குற்றவாளிகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்டவற்றை சட்டவிரோத குவாரிகளில் இருந்து வாங்கியுள்ளது. சிக்மகளூர் அருகே உள்ள பல சட்டவிரோத குவாரிகளையே வெடிபொருட்கள் வாங்க நம்பியதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் தெரிவித்திருந்தார்.
பணம் கிடைத்தால் போதும் என்று அந்த குவாரிகள் அம்மோனியம் நைட்ரேட், ஜெலாட்டின் குச்சிகளை கண்டவர்களுக்கும் விற்பனை செய்து வருகின்றன. அம்மோனியம் நைட்ரேட் விற்பனைக்கு பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி அதன் விற்பனை சட்டவிரோதமாக நடக்கத் தான் செய்கிறது.
கர்நாடகாவில் மட்டும் அல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்டவிரோத குவாரிகளை மூட அரசியல்வாதிகள் முழுமூச்சில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த யாசின் பட்கல் தனது மாநிலத்திலேயே வெடிபொருட்களை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் ராமநகரம் மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் நடக்கும் சட்டவிரோத குவாரிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் டி.கே. சிவகுமார், அவரின் மனைவி உஷா, சகோதரர் டி.கே. சுரேஷ் உள்ளிட்டோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக ராஜ்ய ரைதா சங்காவின் செயலாளர் பி.எஸ். நாராயணசாமி மற்றும் சமூக ஆர்வலர் ஏ.சி. சிவராஜு ஆகியோர் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமைச்சர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.