காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் எங்களுக்கு பாதிப்பு.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா வாதம்
டெல்லி: காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு வாதம் செய்து வருகிறது.
காவிரி நதிநீர் நீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்தது.
இதையடுத்து இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன. அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவ ராய் மற்றும் ஏஎம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
மனுக்களை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி வழங்கிய தீர்ப்பில், காவிரி நதிநீர் பங்கீடு குறித்த மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று திட்டவட்டமாக தெதரிவித்தனர். இறுதி விசாரணை நீதிமன்ற கோடைக்கால விடுமுறையை அடுத்து ஜூலை 11ம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறும் என்றும், இதில் ஒவ்வொரு தரப்பும் வாதத்தை முன்வைக்க ஏதுவாக கால அவகாசம் அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று முதல் மீண்டும் காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்களுக்கு விசாரணை நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்றற வாதத்தின்போது, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பால் கர்நாடகாவுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. மைசூர் மாகாணம் மற்றும் மதராஸ் மாகாணங்கள் நடுவேயான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையில், அதன் அடிப்படையில் நதிநீர் பங்கீடு செய்ய கூடாது என கர்நாடகா வாதம் செய்து வருகிறது.