காவிரியின் குறுக்கே அணை: ரூ.5000 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு ரெடி: கர்நாடக அமைச்சர்
பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு ரூ.5000 கோடி மதிப்பிலான திட்ட மதிப்பீடு தயார் என கர்நாடக மாநில நீர் பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்தார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அங்கு தேக்கி வைக்கப்படும் நீரை குடிநீருக்கும், மின் உற்பத்திக்கும் பயன்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு மற்றும் அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இருந்தபோதிலும் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணி முடிவடைந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான விவரமான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாராகிவிட்டது. இதற்கு அனுமதி வழங்கக்கோரி அடுத்த மாதம் இந்த அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும். ரூ.5 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டப்படும். இந்த புதிய அணை கட்டப்பட்டால் 60 டி.எம்.சி. தண்ணீர் நமக்கு கிடைக்கும்.
ஜூன் 15ம் தேதி வரை குடிநீருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அணைகளில் தண்ணீர் காலியானால் மட்டுமே டெட் ஸ்டோரேஜ் தண்ணீர் பயன்படுத்தப்படும் என்றார்.