தமிழக அரசை கண்டித்து கர்நாடக இளைஞர் காங். தர்ணா! ஜெ., ஓபிஎஸ் உருவ பொம்மைகள் எரிப்பு
பெங்களூரு: மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறையேற்றிய தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை கண்டித்து கர்நாடக இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் இன்று காலை கூடிய கர்நாடக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், முதல்வர் பன்னீர் செல்வம் உருவபடத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர். "காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வதை தமிழக அரசு விட வேண்டும்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் தாங்கி பிடித்திருந்தனர்.
இதன்பிறகு, பன்னீர்செல்வம் உருவ படத்தை தீயிட்டு கொளுத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதனிடையே கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும், ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் உருவ பொம்மையுடன் ஊர்வலம் வந்து அனந்தராவ் சர்க்கிளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
'போராடினால் வெற்றி நமக்கு.. சும்மா இருந்தால், தோல்வி நிச்சயம்' என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதன்பிறகு உருவ பொம்மைகளுக்கு தீயிட்டனர். போலீசார் தலையிட்டு தீயை அணைத்து, போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.