கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீஸ் அக். 4வரை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி கொடுத்ததில் பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து, சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியது. எனவே கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு தடை எழுந்தது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். லுக்அவுட் நோட்டீசுக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது.
சுப்ரீம் கோர்ட் இந்த இடைக்கால தடையை ரத்து செய்து, லுக்அவுட் நோட்டீஸ் செல்லுபடியாகும் என உத்தரவிட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட் அக்டோபர் 4ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.