கசாபை தூக்கிலிட்ட அதே நபர் தான் மேமனையும் தூக்கிலிடுகிறார்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட்ட நபர் தான் தூக்கிலிட உள்ளார்.
1993ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறுத்த யாகூப் மேமன் எடுத்து வரும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இதனால் அவரை வரும் 30ம் தேதி நாக்பூர் சிறையில் வைத்து தூக்கிலிட அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.
மேமனை 26/11 தாக்குதல் வழக்கில் கைதான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட்ட நபர் தான் தூக்கிலிட உள்ளார் என்று கூறப்படுகிறது. யாகூப் மேமனை தூக்கிலிடும் தேதியை மகாராஷ்டிரா அரசு முடிவு செய்ததும் கடந்த 15 நாட்களுக்கு முன்பே அவரை தூக்கிலிடும் நபர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாக்பூர் சிறைக்கு டம்மி வரவழைக்கப்பட்டு அந்த நபர் அதை வைத்து மேமனை தூக்கிலிட பயிற்சி பெற்று வருகிறார். அந்த நபரிடம் யாகூப் மேமனின் எடை உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறை அதிகாரிகள் மேமனின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். தூக்கு தேதி நெருங்கும் வேளையில் மேமன் டென்ஷனாக இல்லாமல் அமைதியாக உள்ளாராம். யாருடனும் அவ்வளவாக பேசுவது இல்லையாம். வழக்கறிஞரிடம் கூட பேசாமல் தலையை மட்டும் தான் அசைக்கிறாராம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேமனுக்கு படபடப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில சமயம் அவர் இரவு நேரத்தில் தூங்காமல் உள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.