காஷ்மீர் ஜீலம் நதியில் வெள்ளம்– 16 பேர் பலி: தவிக்கும் மக்களை மீட்கும் ராணுவம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, ஜீலம் நதியில் வரலாறு காணத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிக் தவிக்கும் மக்களை மீட்க ராணுவம் உதவிடவேண்டும் என அம்மாநில முதல்வர் கோரிக்கைவிடுத்துள்ளார். இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசாரின் கூட்டு நடவடிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டைப்போல இந்தாண்டும் கன மழை பெய்யத் துவங்கியுள்ளது. இம்மாநில மாவட்டங்களில் பரவலான மழையால், நிலச்சரிவு ஏற்பட்டு பொருட்தேசம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ள பாதிப்பில் 16 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மைகுழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
ஜீலத்தில் கரைபுரளும் வெள்ளம்
கடந்த 4 நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்காம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அனந்த் நாக் மாவட்டத்தில் சங்கம் என்னுமிடத்தில் வெள்ள அபாய அளவான 21 அடி உயரத்தை தாண்டி 22.35 அடி உயரத்துக்கு வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.
தவிக்கும் மக்கள்
இதேபோல் ராம்முன்சி என்னுமிடத்தில் ஜீலம் நதியின் வெள்ள அபாய அளவு 18 அடி. ஆனால், அங்கு 19.40 அடி உயரத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளம் காரணமாக ஜீலம் நதிக் கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மண்ணுக்குள் புதைந்தன
இந்த நிலையில், பத்காம் மாவட்டத்தில் உள்ள லேடன் கிராமத்தில் மண் அரிப்பு காரணமாக பூமியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதில், அங்கிருந்த 2 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. அந்த வீடுகளில் வசித்த 16 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
முதல்வர் கோரிக்கை
இதற்கிடையே காஷ்மீர் முதல்வர் முப்திமுகமது சயீத் வெளியிட்டுள்ளசெய்தியில்,காஷ்மீரில்ஏற்பட்டுள்ள நிலைமை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, மீட்புபணிக்கு ராணுவத்தினை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ராணுவம் மீட்பு பணியை துவக்கியுள்ளது.
ராணுவம் மீட்பு
மண்ணில் புதைந்தவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 100 பேர் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் பஞ்சாப்பின் பதிந்தா நகரில் இருந்து ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களின் பணியை உடனடியாக தொடங்கியதை அடுத்து 10 உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி மேலும் 22 பேர் காணாமல் போயுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
விமானங்கள் மூலம்
இந்த நிலையில் காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணமாக ரூ. 200 கோடி ஒதுக்கியுள்ளது. வெள்ளம் பாதித்த காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 2 விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு நேற்று அனுப்பி வைத்தது. மேலும், காஷ்மீரில் வெள்ள நிலைமையை நேரில் அறிவதற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை உடனடியாக அனுப்பி வைத்தார்.
கடந்த ஆண்டு 280 பேர் பலி
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் பெய்த பலத்த மழைக்கு 280 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர். தற்போது காஷ்மீர் மீண்டும் கனமழையினால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.