ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் தேவை.. ஜனாதிபதிக்கு கட்ஜு கோரிக்கை
ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு வசதியாக அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி: தமிழர்கள் அதிகம் விரும்பும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மிருகவதை தடுப்புச்ச ட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து அவரசச் சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கோருகிறேன். இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழி கிடைக்கும். அதேசமயம், காளைகளுக்கு துன்புறுத்தல் இருக்கக் கூடாது என்பதையும் நான் வலியுறுத்துகிறேன். குறிப்பாக அதன் கண்களில் எரிச்சலை ஏற்படுத்துவது, காளைகளை அடிப்பது, அதைத் தாக்குவது, மது அருந்த வைப்பது உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.
இதுபோன்ற சில பாதுகாப்பு நிபந்தனைகளை விதிப்பதற்கு நிச்சயம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இது சுலபமான வழிமுறைதான்.
இதுபோன்ற விஷயங்களில் பாரபட்சம் இல்லாமல் நடக்க முயற்சிக்க வேண்டும். இப்போது மீன் பிடிக்கிறோம். மீனை தண்ணீரிலிருந்து எடுத்தவுடன், அது மூச்சு விட முடியாமல் இறந்து போகிறது. இதற்காக மீன் சாப்பிடக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதா, இல்லையே. மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளதா, இல்லையா.
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. எனவே இதை அவசர கதியில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்த விளையாட்டை விரும்பும் மக்களின் சார்பில் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன் என்று கூறியுள்ளார் கட்ஜு.