மதுரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை - அமைச்சர் மகேஷ் சர்மா
மதுரை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
டெல்லி: கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ராஜ்யசபாவில் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி ராஜ்யசபவில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
கீழடி தொடர்பாக கனிமொழி எழுப்பிய கேள்விகள்:
Recommended Video
1.தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலத்தைக் கணக்கிட அரசாங்கம் கார்பன் ஆராய்ச்சிக்கு அனுப்பியிருக்கிறதா?
2.அப்படி கார்பன் ஆராய்ச்சிக்கு அனுப்பியிருந்தால் அதன் விவரங்கள், மற்றும் ஆராய்ச்சிப்படி தொல்பொருட்களின் காலம் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
3. அப்படி இல்லையென்றால், காரணங்கள் யாவை என்று கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், இந்திய தொல்லியல் துறை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் 2 கார்பன் மாதிரிகளை அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள பீட்டா ஆராய்ச்சி நிறுவனத்துகு அனுப்பியது.
பீட்டா ஆராய்ச்சி நிறுவனம் அளித்த கார்பன் கால கணிப்பு ஆய்வு முடிவு பெறப்பட்டுள்ளது. அதன்படி, கீழடி தொல்பொருளின் முதல் கார்பன் மாதிரியின் காலம் 2160 ஆண்டுகள் பழமையானது என்றும் இரண்டாவது கார்பன் மாதிரியின் காலம் 2200 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிய வந்துள்ளது என்று இந்திய தொல்லியல் துறை தெரிவித்திருப்பதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதன்மூலம் கீழடியின் காலம் கி.மு. 2200 ஆண்டுகள் பழமையானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 தொன்மம் மிக்க பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் கீழடிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் அகழ்வாய்வு 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு அகழ்வாய்வு பணிகள் தொடரும் என்று தெரிவித்திருந்தார். அகழ்வாய்வு பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த 2 ஆண்டில் கிடைத்த சான்றுகள் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.