டெல்லியில் கலாம் நினைவு மையம் அமைக்க மறுத்த மத்திய அரசு: ஓகே சொன்ன கெஜ்ரிவால்
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக டெல்லியில் மையம் ஒன்றை அமைக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக டெல்லியில் அறிவு மையத்தை அமைக்குமாறு அவரது குடும்பத்தார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் டெல்லியில் கலாம் மையம் அமைக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து கலாமின் உறவினரான ஷேக் சலீம் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
கலாம் நினைவு மையம் அமைக்க டெல்லி அரசு முன்வந்துள்ளது. ராமேஸ்வரத்தில் அவருக்கு நினைவு மையம் அமைப்பதுடன் டெல்லியிலும் அமைக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இது குறித்து பல கதவுகளை தட்டியும் பலனில்லாமல் இருந்தது. இறுதியில் அரசின் முடிவை ஏற்றுள்ளோம். அப்துல் கலாம் சர்வதேச பவுன்டேஷன் மூலம் பல நல்லவைகளை செய்ய தீர்மானித்துள்ளோம் என்றார்.
டெல்லியில் கலாம் வசித்த ராஜாஜி மார்க் பங்களாவை அவரது நினைவாக அறிவு மையமாக மாற்ற அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்ததை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.