உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே... இருமல் சிகிச்சைக்காக பெங்களூரு கிளம்பினார் கெஜ்ரிவால்!
பெங்களூரு: தொடர்ந்து இருமலால் அவதிப்பட்டு வரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிரதமர் பரிந்துரைத்த மருத்துவரிடம் சிகிச்சைப் பெறுவதற்காக பெங்களூரு புறப்பட்டார்.
கடந்த சில நாட்களாகவே ஆம் ஆத்மியில் உட்கட்சிப் பூசல் வலுத்து வந்தது. நேற்று டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மூத்தத் தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கெஜ்ரிவால் அளித்த இரண்டாவது ராஜினாமா கடிதமும் ஏற்கப் படவில்லை.
இந்த நிலையில் கெஜ்ரிவால் பெங்களூர் கிளம்பி விட்டார். 10 நாட்கள் பெங்களூரில் தங்கியிருந்து நேச்சுரோபதி சிகிச்சையை எடுத்துக் கொள்வார் கெஜ்ரிவால். அவரது சர்க்கரைப் பிரச்சினை மற்றும் இருமல் பிரச்சினைக்காக இந்த சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
கெஜ்ரிவால் திரும்பி வரும் வரை துணை முதல்வர் மனீஷ் சிசோடியா முதல்வரின் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்வார்.
கடந்த 10 நாட்களாக கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300க்கும் மேல் போய் விட்டது. இதையடுத்து அவருக்கான இன்சுலின் அளவை டாக்டர்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளனர். இருமலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து உடனடி சிகிச்சைக்கு கெஜ்ரிவால் முடிவு செய்தார்.
சோதனைகளுக்குப் பின் சிகிச்சை :
கெஜ்ரிவாலுக்கான சிகிச்சை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கவுள்ள டாக்டர் பபீனா நந்தகுமார் கூறுகையில், 'கடந்த முறை கெஜ்ரிவால் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்காக வந்தார். இந்த முறை இருமல் பிரச்சினைக்காக வந்துள்ளார். எனவே கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை வேறு மாதிரியான சோதனைகள் அவரிடம் நடத்தப்படும். சோதனைகளுக்குப் பின்னரே அவருக்கான சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும்.
நேச்சுரோபதி சிகிச்சை என்பது நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை தருவதாகும். நமது உடலில் உள்ள டாக்சின்கள்தான் பிரச்சினைகளுக்குக் காரணம். அதை சரி செய்தால் நோய் குணமாகும்' என்றார்.