லஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவால் மகளுக்கு 5 ஆண்டு சிறை?
டெல்லி: மண்டல போக்குவரத்து அலுவலக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா ஐஐடியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அண்மையில் ஓட்டுனர் பழகுனர் உரிமம்(எல்.எல்.ஆர்.) வாங்க மண்டல போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேவையான ஆவணங்களை அளிக்காமல் அதற்கு பதில் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.
ஆவணத்திற்கு பதில் பணத்தை பெற்றுக் கொண்டு எல்.எல்.ஆர். அளிக்குமாறு அவர் அதிகாரியை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த அதிகாரி பணத்தை பெறவில்லை. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து முன்னாள் டெல்லி தலைமைச் செயலாளர் ஒமேஷ் மற்றும் பகத் சிங் புரட்சிப்படை தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா ஆகியோர் ஹர்ஷிதா மீது போலீசில் புகார் அளித்தனர். லஞ்சம் வாங்குவது மட்டும் அல்ல, லஞ்சம் கொடுப்பதும் தவறு என்பதால் ஹர்ஷிதாவுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.