ஆம் ஆத்மி கட்சிப் பொறுப்புகளில் ஆதரவாளர்களை அதிரடியாக நியமித்த அரவிந்த் கேஜ்ரிவால்!!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண் நீக்கப்பட்டுள்ளார். இதேபோல ஆம் ஆத்மியின் கட்சிப் பொறுப்புகளில் அதிருப்தியாளர்களை அதிரடியாக நீக்கிவிட்டு தமது ஆதரவாளர்களை நியமித்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, கட்சியின் நிறுவனர்களில் முக்கியமானவர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் ஆம் ஆத்மியில் கடந்த சில வாரங்களாக உட்கட்சி பூசல் நீடித்து வருகிறது.
இந்த 2 அதிருப்தி தலைவர்களையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மற்ற தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
பதவி பறிப்பு
இந்நிலையில் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண், ஆம் ஆத்மியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ் வகேலா தலைமையில் ஆசிஷ் கேதான் மற்றும் குப்தா ஆகியோரை கொண்ட 3 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ராம்தாசும் நீக்கம்
மேலும் ஆம் ஆத்மியின் லோக்பால் அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் கடற்படை தளபதி ராம்தாசும் நீக்கப்பட்டு உள்ளார். அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையை விமர்சித்து கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுவுக்கு இவர் கடிதம் எழுதியிருந்தார்.
புதிய லோக்பால் குழு
ராம்தாசுக்கு பதிலாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகளான என்.திலிப் குமார், ராகேஷ் சின்கா மற்றும் கல்வியாளர் எஸ்.பி.வர்மா ஆகியோரை கொண்ட புதிய லோக்பால் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மியின் அவசர செயற்குழு கூட்டத்தில் இந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா கூறியுள்ளார்.
போராட்ட குழு
மேலும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வரும் ஏப்ரல் 22-ந் தேதி நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை இலியாஸ் ஆஸ்மி, பிரேம் சிங் பஹாரி, யோகேஷ் தாஹியா, சோமேந்திரா தாக்கா, குர்னம் சிங், கிரண் பிசா ஆகியோர் அடங்கிய குழு மேற்கொள்ள உள்ளது.
மாநிலங்களுக்கான குழு
மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை அமைப்பு ரீதியில் பலப்படுத்தும் நோக்கில் அரசியல் விவகாரங்கள் குழு உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் சிங் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மற்ற மாநிலங்களில் கட்சியின் தற்போதைய நிலை குறித்த ஆய்வறிக்கையை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமையிடம் இக் குழு அளிக்கும்.
அத்வாலே
இதனிடையே, ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்ட யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரை இந்தியக் குடியரசுக் கட்சியில் இணைய வருமாறு அக்கட்சியின் தலைவரும், லோக்சபா எம்.பி.யுமான ராம்தாஸ் அத்வலே அழைப்பு விடுத்துள்ளார்.