ராணுவத்தின் அதிரடி தாக்குதல்... கேரளா சட்டசபையில் பாராட்டு தீர்மானம்!
திருவனந்தபுரம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து ராணுவம் அதிரடி தாக்குதல்கள் நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்து கேரளா சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு சென்று அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதன்காரணமாக காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
பாகிஸ்தான் பதில் நடவடிக்கை எடுத்தால், இந்தியாவும் அதிரடி தாக்குதல்களை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடது சாரி அரசு இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. அதில் நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பதான்கோட் மற்றும் உரி போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள சட்டசபை சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.