அப்துல் கலாமை கேரளா ஒரு போதும் மறக்காது... உம்மன் சாண்டி: கேரளா சட்டசபையில் இரங்கல்
திருவனந்தபுரம்: மக்களின் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மறைவிற்கு கேரளா சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை ராமேஸ்வரம் கொண்டு செல்வதற்கு முன்பு கேரளா கொண்டு வந்து, கேரள மக்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள சட்டசபை இன்று காலை கூடியது. இதில் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். முதல்வர் உம்மன் சாண்டி அப்துல் கலாம் பற்றி குறிப்பிடுகையில் ‘‘அவரை கேளரா ஒரு போதும் மறக்காது'' என்றார்.
மார்க்சிஸ் கம்யூனிஸ்டு தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் கூறுகையில், ‘அப்துல்கலாம் மக்களின் ஜனாதிபதியாக இருந்தார். ஜனாதிபதிக்கான நடை முறைகளை மீறி பொது மக்களுடன் கலந்து விட்டவர்‘ என்றார்.
மன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் அஞ்சலி தெரிவித்து பேசினார்கள். பின்னர் சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்த அனுமதி
இதனிடையே கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அப்துல் கலாமின் உடலை ராமேஸ்வரம் கொண்டு செல்வதற்கு முன்பு கேரளா கொண்டு வந்து, கேரள மக்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.