51 வயது பெண்ணிடம் சில்மிஷம்...கேரள காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் கைது!
51 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் : 51 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில், கோவளம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் வின்சென்ட். கடந்த வாரம் பாலராமாபுரத்தை சேர்ந்த 51வது பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து நெய்யத்திங்கரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் எம்எல்ஏ வின்சென்ட் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். 51 வயது பெண்ணின் சகோதரர் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு எம்எல்ஏ வின்சென்ட் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு, அவருக்கு பாலியல் தொல்லைகளும் கொடுத்தாக போலீசில் கூறியிருந்தார். இந்நிலையில் எம்எல்ஏ அந்தப் பெண்ணிடம் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானதாகத் தெரிகிறது.
இதனையடுத்து இந்த புகாரை விசாரித்த கேரள போலீசார் தற்கொலைக்கு தூண்டியது, பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த புகாரில் முகாந்திரம் இருப்பதையடுத்து வின்சென்ட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தவறு செய்த எம்எல்ஏ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என்று கேரள சட்டசபை சபாநாயகர் கூறியதையடுத்து வின்சென்ட் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது திட்டமிட்டே வழக்கு போடப்பட்டுள்ளதாக வின்சென்ட் காவல்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.