நாட்டிலேயே முதன்முறையாக... அரசு பள்ளிகளில் டிஜிட்டல் புத்தகங்களை அறிமுகப் படுத்துகிறது கேரளா!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் டிஜிட்டல் பாடப் புத்தகங்கள் அறிமுகப் படுத்தப்பட உள்ளன. இதன்படி, அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.
உலகின் பல நாடுகளில் உள்ள பள்ளிகளில் ‘டிஜிட்டல் முறை பாடத்திட்டங்கள்' நடைமுறையில் உள்ளது. இதன்படி, காகிதத்தில் அச்சிடப்பட்ட பாடநூல்களுக்கும், கரும்பலகைகளுக்கும் மாற்றாக வகுப்பறைகளில் பெரிய திரைகள் பொருத்தப்பட்டு ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் ஆசிரியர் பாடம் நடத்துவார்.
ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் இதே போன்ற பாடமுறை தற்போது இந்தியாவின் சில பள்ளிகளில் கற்றுத் தரப் பட்டாலும், முழுமையாக இன்னும் நடைமுரைக்கு வரவில்லை. இந்நிலையில், கேரளாவில் அடுத்தாண்டு முதல் முழுமையான டிஜிட்டல் முறை பாடத்திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட உள்ளன.
இதன்படி, பள்ளிப் பாடங்களை டி.சி.டி., எனப்படும் 'டிஜிட்டல் கொலாபொரேடிவ் டெக்ஸ்ட்புக்' என்ற முறையில் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பாட திட்டத்தின் படி, ஒவ்வொரு வகுப்பிற்குமான பாடங்கள் டிஜிட்டல் பைல்களாக மாற்றப்பட்டு அதனுடன் பிற ஒளி, ஒலி சேர்க்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ளுமாறு செய்யப்படும்.
இதற்காக தற்போது பயன்பாட்டில் உள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தும் ‘ஸ்கேன்' செய்யப்பட்டு இதற்கான பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன என கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு "IT@School" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சுமார் 37 லட்சம் மாணவர்களும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயனடைவார்கள் என கேரள அரசின் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாணவ மாணவிகளும் வீட்டில் இருந்தபடியே "டேப்லெட்" மூலம் "IT@School" இணையத்திற்கு சென்று இந்த பாடங்களை படித்துக் கொள்ளலாம். மாநில அரசின் பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் தனியார் பள்ளிகளும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால், அவற்றிற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பகிர்ந்துக் கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய கல்வித் திட்டத்திற்காக, டேப்ளட் பிசி, இ-ரீடர் போன்றவை ஏராளமாக வாங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, இந்த திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.