தேர்தல் முடிவுகள் மும்முரத்தில் சிம் கார்டை விழுங்கிய 16 வயது சிறுமி
திருவனந்தபுரம்: கேரளாவில் மாநில சட்டசபை தேர்தல் குறித்து தனது பெற்றோருடன் விவாதித்த 16 வயது சிறுமி சிம் கார்டை விழுங்கிவிட்டார்.
கேரள மாநில சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அஸ்வதி(16).
அவர் கடந்த 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது மிகவும் உற்சாகமானார். தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் லைவாக பார்த்துக் கொண்டு அது குறித்து அவர் தனது பெற்றோருடன் காரசாரமாக விவாதித்தார்.
விவாதத்தின் சூட்டில் அவர் தனது கையில் வைத்திருந்த சிம் கார்டை விழுங்கிவிட்டார். உடனே அவருக்கு வாழைப்பழம் கொடுத்தனர். அப்படியும் சிம் கார்டு வெளியே வரவில்லை. அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிம் கார்டு அவரது நுரையீரலில் சிக்கியுள்ளதை பார்த்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அதை வெளியே எடுத்தனர்.