அமைச்சரவையில் என்ன நடக்கிறது?: வெப்சைட்டில் வெளியிடும் கேரள அரசு
திருவனந்தபுரம்: கேரள அரசின் கேபினட் முடிவுகள் இணையதளத்தில் முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கேரள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கேரள முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் வாரா வாரம் புதன்கிழமை நடப்பது வழக்கம். கடந்த முறை உம்மன்சாண்டி முதல்வராக இருந்த போது அமைச்சரவை கூட்டம் முடிந்த உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வரே பத்திரிக்கையாளர்களை அழைத்து நேரடியாக தெரிவித்து வந்தார்.
தற்போது வாரம் தோறும் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் போதும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் பினரயி விஜயன் பத்திரிக்கையாளர் கூட்டத்தை கூட்டி தெரிவிப்பதில்லை. இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விபரங்கள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கக் கோரி திருவனந்தபுரம் தகவல் உரிமை ஆணையருக்கு ஒரு அமைப்பின் சார்பில் விண்ணப்பம் வந்தது. இதையடுத்து அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட கேரள அரசுக்கு கேரள தலைமை தகவல் உரிமை ஆணையர் உத்தரவிட்டார்.
இருப்பினும் அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட முடியாது என முதல்வர் விஜயன் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது முடிவுகளை வெளியிட விஜயன் முடிவு செய்துள்ளார். இதன்படி இனி நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.