முல்லைப் பெரியாறில் அணைகட்டும் முயற்சி மீண்டும் தொடங்கப்படும்.. கேரளா தொடர்ந்து பிடிவாதம்
டெல்லி : முல்லை பெரியாறு அணைபகுதியில் புதிய அணை கட்ட மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கேரள சுற்றுச்சூழல் அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்டும் முடிவுக்கு தமிழக கஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனினும் முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கேரளா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுற்றுச்சூழல் அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், புதிய அணை கட்டுவதற்கான பரிந்துரைகள் மத்திய அமைச்சகத்திற்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
மக்களின் நலனுக்காகத் தான் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதாக கூறிய திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், இவ்விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது 100 ஆண்டுக்கு மேல் பழமையான முல்லை பெரியாறு அணையால் ,அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கேரள அரசு தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.